Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Monday, October 31, 2016

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA)


யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA)

‘உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.



இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்த குழந்தையின் பெற்றோர் அவளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள்.

உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற இன்றைய உலகில், இதுபோல ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கும் காலகட்டம்

மனிதர்களை மனிதர்களே நம்ப முடியாத இந்த நாட்களில், மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கின்றன.

* கம்ப்யூட்டரில் நாம் இமெயில் முகவரிகளை உருவாக்கும்போதும்…

* ஆன்லைனில் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்தும்போதும்…

* ஓரிரு முறை நம் பாஸ்வேர்டை சரியாக டைப் செய்யாமல் அடுத்த முறை சரியாக டைப் செய்யும்போதும்…

* சமூக வலைத்தள வெப்சைட்டுகளில் புதிதாக அக்கவுன்ட்டுகளை உருவாக்கும்போதும், அவற்றில் கமென்ட்டுகளை பதிவு செய்யும்போதும்…

இப்படி கம்ப்யூட்டருக்கு நாம் மனிதனா அல்லது வைரஸா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் ஏற்படும். அது நம்மை நம்பாமல் நமக்கு ஒரு இமேஜை அனுப்பி வைக்கும்.



அந்த இமேஜில் வளைவு நெளிவாக குழப்பமாக டைப் செய்யப்பட்ட எண்களும், எழுத்துக்களும் இருக்கும். அதைப் பார்த்து நாம் சரியாக டைப் செய்தால் மட்டுமே கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒத்துக்கொள்ளும். வைரஸ் புரோகிராம்களுக்கு இமேஜில் குழப்பமாக உள்ளவற்றை பார்த்து புரிந்துகொள்ளத் தெரியாது.

தன்னை இயக்கும் நபர் மனிதன்தானா என்பதை உறுதிசெய்த கொண்டபின்தான் கம்ப்யூட்டர் நம்மை தொடர்ச்சியாக செயல்பட வைக்கும்.

நாம் மனிதன் தான் என நிரூபிக்க உதவும் CAPTCHA!

கம்ப்யூட்டர் நம்மை மனிதனா, வைரஸா என பரிசோதிப்பதற்காக நமக்கு அனுப்பி வைக்கின்ற விவரத்துக்கு Capcha என்று பெயர். CAPTCHA என்றால் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.

கம்ப்யூட்டரை தாக்குகின்ற வைரஸ்களில் இருந்து மட்டும் இல்லாமல், நம்மை ஏமாற்றி நம் அக்கவுன்ட்டுக்குள் சென்று நம் தகவல்களையும், பணத்தையும் ‘அபேஸ்’ செய்கின்ற மனிதர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு கேப்ட்சா என்ற பாதுகாப்புக் கவசம் மிகவும் அவசியம்.

மனிதர்களை கம்ப்யூட்டர் சந்தேகிக்க காரணங்கள்

இலவச இமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் நொடிக்கு ஆயிரம் இமெயில் முகவரிகளை வைரஸ்கள் உருவாக்கிக் குவித்து வந்தன. நம் இமெயில் முகவரிக்குள் மனிதர்கள் வேண்டும் என்றே பாஸ்வேர்டை மாற்றி மாற்றி டைப் செய்து உள்ளே செல்ல முயற்சிக்கின்ற அதே வேளையில், வைரஸ்களும் மனிதர்களைப் போல செயல்பட்டு, நம் இமெயில் முகவரியில் இருந்து நாம் அனுப்புவதைப்போல தாறுமாறான தகவல்களை, புகைப்படங்களை நம் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்புதல் என நம்மை திசைதிருப்பி, ‘எப்போதடா அசருவோம்’ என ஏமாற்றக் காத்திருக்கின்றன.

இண்டர்நெட்டில் நூதனத் திருடர்கள் வைரஸ்கள் மூலம் நம் வங்கி அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டை டைப் செய்து நம் கணக்கில் இருந்து ஒட்டுமொத்த பணத்தையும் ‘ஸ்வாகா’ செய்துவிடுகிறார்கள்.
வெப்சைட், பிளாக், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமக்கே தெரியாமல் நாம் அனுப்புவதைப்போல, அசிங்கமான படங்களுடன் அறுவெறுப்பான பதிவுகளைப் பகிர்தல், கமென்ட்டுகளை போடுதல் என எங்கும் எதிலும் வைரஸ்களின் அட்டகாசம்.

இதுபோன்ற காரணங்களினால் கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொள்கின்றன. கம்ப்யூட்டரை கண்டுபிடித்ததும் மனிதன்தான். கம்ப்யூட்டரை வைரஸ் மூலம் தாறுமாறாக செயல்பட வைப்பதும், மனிதர்கள் எழுதுகின்ற வைரஸ் புரோகிராம்களால்தான். கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொண்டு ‘யார் நீ?’ என்று கேள்வி கேட்பதும், நாம் எழுதுகின்ற சாஃட்வேர்களால்தான். ஆக்கலும், அழித்தலும் நம்மிடம்தான் உள்ளது.

கேப்ட்சா (CAPTCHA) – எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

1997-ஆம் ஆண்டு மார்க் டி. லில்லிப்டிட்ஜ் (Mark D. Lillibridge), மார்ட்டின் அபாடி (Martin Abadi), கிருஷ்ணா பாரத் (Krishna Bharat), ஆண்ட்ரி பார்டர் (Andrei Z. Broder) போன்றோர்களால் கேப்ட்சாவின் (CAPTCHA) அடிப்படை தத்துவம் உருவாக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட கேப்ட்சா லூயிஸ் வான் ஆஹன் (Luis von Ahn), மானுவல் ப்ளம் (Manuel Blum), நிகோலஸ் ஜே. ஹுப்பர் (Nicholas J. Hopper), ஜான் லாங்ஃப்ராட் (John Langford) போன்றோரால் வடிவமைப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இயந்திரம் தோற்று மனிதன் ஜெயிக்கும் ‘கேப்ட்சா’ தத்துவம்

மார்டன் கம்ப்யூட்டர் நுணுக்கங்களின் தந்தை என்றழைக்கப்படும் ‘ஆலன் ட்ர்னிங்’ (Alan Turing) என்பவர் மனிதனும், கம்ப்யூட்டரும் ஒன்று போல செயல்பட முடியுமா, மனிதனைப் போல சிந்திக்க முடியுமா, செயல்பட முடியுமா என்பதை பரிசோதிக்க விரும்பினார். மனிதனையும், கம்ப்யூட்டரையும் வைத்து ஒரு சிறிய சோதனையை நடத்தினார். அதில் நடுவராக இருப்பவருக்கு எதிரில் இருக்கும் மனிதனும், கம்ப்யூட்டரும் கண்களுக்குத் தெரியாது. எது இயந்திரம், மனிதன் யார் என்பதும் தெரியாது. இருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும். இருவரிடம் இருந்து கிடைக்கின்ற பதிலில் மனிதன் சரியான பதிலை சொன்னானா அல்லது இயந்திரம் சரியான பதிலை சொன்னதா என்பது நடுவரால் கணிக்க முடியாத அளவுக்கு மனிதனும், இயந்திரமும் சரிநிகர் சமானமாக செயல்படுவர். இந்தப் பரிசோதனைக்கு Turing Test என்று பெயர்.

கேப்ட்சாவில் பயன்படுத்தப்படும் தத்துவம், Turing Test என்ற பரிசோதனைக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது கம்ப்யூட்டரே செய்கின்ற பரிசோதனையில் இயந்திரம் தோற்று மனிதன் ஜெயித்து ‘தான் மனிதன்’ என்பதை நிரூபிப்பதால் இதில் பயன்படுத்தப்படும் தத்துவத்துக்கு Anti Turing Test என்று பெயர்.

அதிகம் பயன்படுத்தப்படும் ‘கேப்ட்சா’

’கேப்ட்சா’ என்ற பரிசோதனை விவரம் வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வெப்சைட்டின் உரிமையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ள கீழ்காணும் ‘கேப்ட்சா’ விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

· The Standard Distorted Word CAPTCHA with an Audio Option
· Picture Identification Captcha
· Math Solving Captcha
· 3D Captcha

The Standard Distorted Word CAPTCHA with an Audio Option:



இந்த கேப்ட்சா எழுத்துக்களாலும், எண்களாலும் இமேஜ்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்து நாம் டைப் செய்ய வேண்டும். அப்படி நாம் டைப் செய்கின்ற வார்த்தை கேப்ட்சா வார்த்தையோடு சரியாக இல்லை என்றாலோ அல்லது அந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தாலோ, Recaptcha என்ற பட்டனை கிளிக் செய்தால் புதிதாக மற்றொரு கேப்ட்சா வார்த்தை கிடைக்கும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காதால் கேட்டு வார்த்தைகளை டைப் செய்வதற்காக ஸ்பீக்கர் ஐகான் இருக்கும். இதை கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை படித்துக் காட்டும். அதை கேட்டு டைப் செய்யலாம்.

Picture Identification Captcha


இந்த கேப்ட்சா, படங்களை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு, அதன் கீழ் பல படங்கள் வரிசைகட்டி கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஒத்த மற்ற படங்களை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் என்றோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒருகுறிப்பிட்ட படத்தை மட்டும் செலக்ட் செய்யவும் என்றோ கேட்பார்கள்.

இங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில் பூனையின் இமேஜை ஒத்த படங்களை செலக்ட் செய்யவும் என்று இருப்பதை கவனிக்கவும்.

நீங்கள் பூனையின் படத்தை சரியாக செலக்ட் செய்து வெரிஃபை பட்டனை கிளிக் செய்தால் மட்டுமே உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் ஒரு மனிதன் என்பதை உறுதிசெய்துகொண்டு உங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும்.

இல்லையேல் நீங்கள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

Math Solving Captcha



இந்த கேப்ட்சா சிறிய கணக்கை செய்து பதிலை டைப் செய்யச் சொல்லும். இங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில் 1+3 எவ்வளவு என்று கணக்கீடு செய்து 4 என டைப் செய்தால் கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒத்துக்கொள்ளும். ( நேரம்தான்! )

3D Captcha



இது முப்பரிணாம கேப்ட்சா. 3D வார்த்தையை வெளிப்படுத்தும். அதைப் பார்த்து சரியாக டைப் செய்ய வேண்டும்.

புதிய டெக்னாலஜியில் புதுமையான ‘கேப்ட்சா’ 



எழுத்துக்களால் ஆன கேப்ட்சா விவரத்தில் பயன்படுத்தப்படும் சிதைக்கப்பட்ட எழுத்துக்களை இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்கள் அல்லாத வைரஸ் போன்றவை புரிந்துகொள்ள முடியும் என்ற ஆராய்ச்சி முடிவினாலும், பெரும்பாலான மக்களுக்கு எழுத்துக்களைப் புரிந்துகொண்டு டைப் செய்யும் நுட்பம் கடினமாக இருப்பதாக கருத்து நிலவுவதாலும், ‘No CAPTCHA reCAPTCHAs’ என்ற புதிய கேப்ட்சா விவரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு செக்பாக்ஸ் ‘I am not a Robot’ என்ற தகவலுடன் வெளிப்பட்டிருக்கும். அதை ‘டிக்’ செய்தால்போதும். நாம் மனிதன்தான் என்பதை கம்ப்யூட்டருக்குப் புரிந்துவிடும்.

பழமையும், புதுமையும் கலந்த ‘கேப்ட்சா’ 




இன்னும் சில கேப்ட்சாக்களில் ‘I am not a Robot’ என்ற செக்பாக்ஸை டிக் செய்தவுடன் Type the Text என்ற தகவலுடன் ஒரு சிதைக்கப்பட்ட வார்த்தை வெளிப்படும். அதைப் பார்த்து டைப் செய்ய வேண்டும். ‘No CAPTCHA reCAPTCHAs’ என்ற புதிய வரவை முழுமையாக நம்பாதவர்கள் பழமையையும், புதுமையையும் கலந்து பயன்படுத்துவதற்காக இந்த வகை கேப்ட்சா உதவுகிறது.

எது எப்படியோ மனிதன், தான் கண்டுபிடித்த கம்ப்யூட்டரிடமே ‘நான் மனிதன்தான், உன்னைப் பயன்படுத்த அனுமதி கொடு’ என்று மண்டியிட்டுக் கேட்கின்ற நிலை வந்து விட்டதே, இதைத்தான் கலி காலம் என்கிறார்களோ!
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u